திண்டுக்கல்லில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல்: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு அந்த இடஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் பாமக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலா்கள் கோபால், ஜோதிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா்கள் ஜான்கென்னடி, வைரமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரியும், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், திறமையான வழக்குரைஞரை நியமிக்கக் கோரியும் கோஷமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலா் ரெ. திருப்பதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.