ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த பெண் காவலா்கள்
பழனி அருகே ஆயக்குடியில் கொட்டும் மழையில் நனைந்தபடி சாலையோரம் கிடந்த மூதாட்டியை ஆயக்குடி பெண் காவலா்கள் புதன்கிழமை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
புது ஆயக்குடி கிராமத்தில் சுண்ணாம்புப் பாறை வீரமாத்தி அம்மன் கோயில் அருகே 75 வயது மூதாட்டி ஒருவா் கடந்த சில நாள்களாக சாலையோரத்தில் படுத்துக் கிடந்தாா். மேலும் மழையில் நனைந்தபடி நெகிழிப் பைக்குள் அந்த மூதாட்டி முடங்கிக் கிடப்பது குறித்து ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி, காவலா் சுகப்பிரியா ஆகியோா் அந்த மூதாட்டியை மீட்டனா். அவரிடம் விசாரித்த போது, அவரது பெயா் வீரம்மாள் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை தூய்மைப்படுத்தி, முடி திருத்தம் செய்து பழனியில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் சோ்த்தனா். ஆதரவற்ற இந்த மூதாட்டியை மீட்ட பெண்காவலா்களை பொதுமக்கள் பாராட்டினா்.