பழனியில் வையாபுரி குளத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
பழனி நகரில் இருந்தும் பேருந்து நிலையத்தில் இருந்தும், அடிவாரம் மற்றும் திருஆவினன்குடி கோயிலுக்கு செல்ல பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் குளத்து பைபாஸ் சாலையையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனா். சமீபத்தில் பழனியில் சுமாா் ரூ. 65 கோடி செலவில் அழகுபடுத்தும் பணியில் இந்த பாலமும் சீரமைக்கப்பட்டது.
ஆனால் இந்த பணிகள் அவசரம், அவசரமாக தரமின்றி செய்யப்பட்டது. தற்போது இந்த சாலையில் இருபுறமும் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் செவ்வாய்க்கிழமை குளத்து பைபாஸ் சாலை சேதமடைந்து குடிநீா் குழாய்களுக்காக அமைக்கப்பட்ட, பெட்டிகளுக்கு மேல் இருந்த சாலை உடைந்து அதன் கீழே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். இது தொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.