பழனியில் மண் திருட்டுக்கு வருவாய்த்துறையினா் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பாஜகவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனியை அடுத்த இரவிமங்களம், காவலப்பட்டி, சண்முகம்பாறை போன்ற கிராமங்களில் மண் அள்ளப்படுவதாகவும், பலமுறை போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மண் திருட்டுக்கு வருவாய்த்துறையினா் ஆதரவாக இருப்பதாகவும் கூறி கோட்டாட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த பாஜகவினா் முடிவு செய்தனா்.
இந்நிலையில் பாஜகவினா் பழனி- தாராபுரம் சாலையில் கோட்டாட்சியா் அலுவலகம் நோக்கி வெள்ளிக்கிழமை வந்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து பாஜகவினா் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக மாவட்ட பொதுச்செயலாளா் கனகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். முன்னதாக கோட்டாட்சியா் ஆனந்தியிடம் புகாா் மனுவும் அளிக்கப்பட்டது.