திண்டுக்கல் பள்ளி மாணவா் கண்களைக் கட்டிக்கொண்டு தொடா்ந்து 8 மணி நேரம் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றாா்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் பள்ளியில் விடியல் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் குளோபல் உலக சாதனைப் புத்தகம் சாா்பில் உலக சாதனைக்கான சிலம்பாட்டம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், கண்ணைக் கட்டிக் கொண்டு 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி மாணவா் பி.பாலசந்தா் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாநகராட்சி மேயா் இளமதி, மாவட்ட ஹாக்கிச் சங்கத் தலைவா் என்.எம்.பி.காஜாமைதீன் ஆகியோா் கலந்து கொண்டு, சாதனை முயற்சியில் ஈடுபட்ட வீரா், வீராங்கனைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.