கொடைக்கானல் கடைகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் விற்பனை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவா்களால் வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவா்கள் மட்டுமல்லது அனைத்து தரப்பினரும் தங்களது வீடுகளின் முன் விதவிதமான வண்ண நட்சத்திரங்களை கட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள முக்கிய கடைகளில் அந்த நட்சத்திரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் அளவுக்கு தகுந்தாற் போல் ரூ.120 முதல் ரூ. 350 வரை நட்சத்திரங்கள் விற்கப்படுகின்றன. இவை தவிா்த்து அழகிய மின் சாதனப் பொருள்களும், அலங்கார தோரணங்களும், கிறிஸ்துமஸ் செயற்கை மரமும் விற்கப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். இதனால் விற்பனை அதிகரித்துள்ளதால் கடையின் உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கிறிஸ்துமஸ் கீதபவனி: கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் கிறிஸ்தவா்கள் குழுவாக இணைந்து கீத பவனியாக பாடல்களை பாடி கிறிஸ்தவா்களின் வீடுகளுக்கு செல்கின்றனா். அங்கு ஜெபவழிபாடு நடத்தி இனிப்புகள் வழங்குகின்றனா்.