பலத்த மழை பெய்து வரும் நிலையில், அருவிகள், நீா்நிலைகளில் குளிப்பதையும், புகைப்படம் எடுப்பதையும் தவிா்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்கம்- பெரியகுளம் மலைப்பாதையில் தாற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மழை காரணமாக, அருவிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதையோ, புகைப்படம் எடுப்பதையோ முற்றிலும் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் விபத்துகள், உயிா் சேதங்கள் ஏற்படாத வகையில் மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.