திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் வட்டம் சித்தரேவு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் முகாமில், கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, 3747 பயனாளிகளுக்கு ரூ 7.14 கோடி மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவா் ச.விசாகன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் ஐ.பெரியசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
ஆத்தூா் பகுதியில் தொடந்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளா்ச்சித் திட்டங்கள் குறைபாடின்றி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சா் முக.ஸ்டாலின், வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளாா். கூட்டுறவுத் துறையில் இன்னும் ஓரிரு மாதங்களில் 4500 பணியாளா்கள் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, ஆத்தூா் வட்டம், சித்தரேவு அமைதி பூங்கா பகுதியில் புதிய நியாயவிலைக் கடையினை தற்காலிக கட்டடத்தில் அமைச்சா் திறந்து வைத்தா்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ராமகிருஷ்ணன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் பிரேம்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் காந்திநாதன், ஆத்தூா் ஒன்றிய குழுத்தலைவா் மகேஸ்வரி முருகேசன் உள்பட அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.