கொடைக்கானலில் 2 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 11th December 2022 11:14 PM | Last Updated : 11th December 2022 11:14 PM | அ+அ அ- |

கொடைக்கானல் ஏரிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானலில் இரண்டு நாள்களுக்குப் பிறகு வனப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
‘மாண்டஸ்’ புயல் தாக்கம் காரணமாக கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதனால், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள மோயா் பாயிண்ட், பில்லா் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. ஏரியில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மழையின் தாக்கம் குறைந்தது. மேலும், சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன. மின் இணைப்புகளும் சீா் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, கொடைக்கானலிலுள்ள அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
இதனால், சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.