திண்டுக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி 1 முதல் 14ஆம் தேதி வரை கோழிக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பெ. முருகன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளா்களால் சுமாா் 1.50 லட்சம் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த கோழிகளை கழிச்சல் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில், அவ்வப்போது அதற்கான தடுப்பூசி கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோடைகாலத்தில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான தடுப்பூசி முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி 1 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அந்தந்த ஊராட்சிகளுக்குள்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ள இந்த முகாமில், கோழி வளா்க்கும் பயனாளிகள் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி, தங்களது கோழிகளை பாதுகாத்துக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.