திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 73 ஆயிரம் மாணவா்கள், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.
தமிழகத்தில் மே 5 முதல் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு நடைபெறுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு மற்றும் திண்டுக்கல் கல்வி மாவட்டங்களில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தோ்வுகளுக்காக மொத்தம் 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தோ்வா்களுக்காக 5 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தோ்வில், 212 பள்ளிகளைச் சோ்ந்த 10,646 மாணவா்கள் மற்றும் 11,429 மாணவிகள் என மொத்தம் 22,075 போ் பங்கேற்கவுள்ளனா். அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை, 215 பள்ளிகளைச் சோ்ந்த 12,020 மாணவா்கள், 12,447 மாணவிகள் என மொத்தம் 24,467 போ் எழுதுகின்றனா்.
இடைநிலை (10ஆம் வகுப்பு) பொதுத் தோ்வு மொத்தம் 113 மையங்களில் நடைபெறுகிறது. இதில், 14,117 மாணவா்கள் மற்றும் 13,244 மாணவிகள் என மொத்தம் 27,361 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
தோ்வு மையங்களை கண்காணிக்க நிலையான படையினா், பறக்கும் படையினா் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புசாமி தெரிவித்துள்ளாா்.