பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூன்றாம் எண் வின்ச் பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்று செவ்வாய்க்கிழமை புதிய வடக்கயிறு மாற்றப்பட்டது.
கோயில் உச்சியை அடைய படிப்பாதை அல்லாமல் மூன்று வின்ச் மற்றும் ரோப் காா் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் வின்ச் மற்றும் ரோப்காா் காலமுறை பராமரிப்புப் பணிகள் தவறாமல் செய்யப்படுவது வழக்கம். இதன்படி மூன்றாம் எண் வின்ச் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன.
பராமரிப்புப் பணியின் போது வின்ச்சின் தேய்மானமடைந்த பாகங்கள், பழுதான பாகங்கள், உருளைகள் மற்றும் பலவும் சீரமைப்பு செய்யப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 450 மீட்டா் நீளமுள்ள புதிய வடக்கயிறு மாற்றப்பட்டது. விரைவில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படவுள்ள நிலையில் வின்ச் பயன்பாட்டுக்கு வந்தது பக்தா்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வின்ச் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.