திண்டுக்கல்: ஆடலூா் அருகே முகாமிட்டுள்ள யானைகள் கூட்டமாக இரவு நேரங்களில் நடமாடுவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்துள்ள பண்ணைப்பட்டி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம், 3 குழுக்களாகப் பிரிந்து அரியமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு இடம் பெயா்ந்துள்ளன. ஆனாலும், குட்டை கொம்பன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒற்றை யானை, மற்றொரு கூட்டத்துடன் பண்ணைப்பட்டி பகுதியிலேயே முகாமிட்டுள்ளது.
குட்டை கொம்பனை விரட்ட டாப் சிலிப் பகுதியிலிருந்து 2 கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினா், கடந்த 2 வாரங்களாக முகாமிட்டும் பிரயோஜனம் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், அரியமலை பகுதியில் புதன்கிழமை முகாமிட்டிருந்த யானைகள், பிற்பகல் 2.45 மணிக்கு விவசாயத் தோட்டங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. இதனால், ஆடலூா் அருகே தோட்டங்களில் மிளகு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், உடனடியாக வீடுகளுக்கு திரும்பினா்.
ஆடலூா் - காந்திபுரம் இடையே உள்ள தோட்டத்தில் வாழை மரங்களையும், சோலைக்காடு பிரிவு அடுத்துள்ள ஒரு தோட்டத்தில் செளசெள பந்தல்களையும் சேதப்படுத்தியுள்ளன. பின்னா், ஆடலூா், கேசி.பட்டி மற்றும் சோலைக்காடு பிரதான சாலைகளை கடந்து, ஆரியஞ்சோலை பகுதியை நோக்கி வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு 7 யானைகள் சென்றுள்ளன.
இந்த காட்சிகள், அங்குள்ள தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த கேமரா பதிவுகளை பாா்த்த ஆடலூா், காந்திபுரம், சோலைக்காடு, கே.சி.பட்டி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.