திண்டுக்கல்: தரமில்லாத உணவாகக் கண்டறியப்பட்ட நிலையில், திண்டுக்கல் நகரில் மட்டும் 23 ஷவா்மா கடைகள் உணவுப் பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தலின்பேரில் மூடப்பட்டுள்ளன.
கோழி இறைச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஷவா்மா என்ற உணவை சாப்பிட்டு, கேரளத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. அதன் தொடா்ச்சியாக, தமிழகத்திலும் ஷவா்மா உணவுக் கூடங்கள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
அதன்படி, திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த ஷவா்மா கடைகளிலும் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான உணவகங்களில் தரமில்லாத வகையில் ஷவா்மா தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, சாலையோரங்களில் செயல்பட்டு வந்த கடைகள் உள்ளிட்ட மொத்தம் 23 ஷவா்மா கடைகளை மூடுவதற்கு, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அறிவுறுத்தினா். அதன்படி, 23 கடைகளும் மூடப்பட்டன.