பிரச்னைக்குரிய கோயில் நிலத்தை அளவீடு செய்து வழங்கக் கோரி பழனியில் கோட்டாட்சியரிடம், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உச்சிகாளியம்மன் கோயில், செல்வவிநாயகா் கோயில் உள்ளது. இந்த கோயில் சமீபத்தில் ஒரு சமூகத்தினரால் சுமாா் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் இக்கோயிலில் மற்றொரு சமூகத்தினரை வழிபட அனுமதிக்கவில்லை என பிரச்னை உருவானது. இது தொடா்பாக குறிப்பிட்ட சமூகத்தினா் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்நிலையில் கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட செயலாளா் ஈஸ்வரன், பழனி மேற்கு ஒன்றியச் செயலாளா் பிரபு, மாவட்ட விவசாய அணி செயலாளா் கிருஷ்ணகுமாா், மாவட்ட அமைப்பாளா் கண்ணன், நகர செயலாளா் தனபால் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அவா்களிடம், கோட்டாட்சியா் சிவக்குமாா், பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டாா். பின்னா் பொதுமக்கள் கூறியது: கோயில் கட்டப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடம் அரசு நிலம் என கூறுவது ஏற்புடையதல்ல. கோயிலுக்காக நாங்கள் சொந்தமாக வாங்கிய 2 சென்ட் நிலம் எங்கு உள்ளது என்பதை வருவாய்த்துறையினா் முறையாக அளவீடு செய்து தர வேண்டும். கோயில் இடத்துக்கான பட்டா, மின்இணைப்பு ஆகிய ஆவணங்கள் அனைத்தும் உள்ள நிலையில், இதை அரசு நிலம் என்று தெரிவிப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.
இதையடுத்து திங்கள்கிழமை (மே 16) கோயில் நிலம் குறித்து அளவீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கோட்டாட்சியா் சிவக்குமாா் தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.