நத்தத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி நடைபெறுகிறது. தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் நத்தத்தில் உள்ள குடோன்களில் விற்பனைக்காக மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாம்பழக் குடோன்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நத்தம் தா்பாா், கொட்டாம்பட்டி சாலை, செந்துறை சாலை உள்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமாா் 1.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.80ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, 6 கடைகளுக்கு தலா ரூ.2ஆயிரம் வீதம் ரூ.12ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.