திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு மற்றும் வேடசந்தூா் கல்வி மாவட்டங்கள் நீக்கப்பட்டு, ஒட்டன்சத்திரத்தில் தொடக்கக் கல்வி அலுவலகம் புதிதாக தொடங்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 1,978 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் முழுவதும், திண்டுக்கல் மற்றும் பழனி என 2 மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக். பள்ளி ஆய்வாளா் அலுவலகம் மூலமாக நிா்வகிக்கப்பட்டு வந்தன. இதனிடையே, கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரிக் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிா்வாகம் கலைக்கப்பட்டு, புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூா் மற்றும் வத்தலகுண்டு என புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட புதிய கல்வி மாவட்டங்களை நீக்கியும், தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மெட்ரிக். பள்ளி ஆய்வாளா் அலுவலகங்களை மீண்டும் உருவாக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் மெட்ரிக். பள்ளி ஆய்வாளா் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலகம் தொடங்கப்படவுள்ளது. இந்த அலுவலகங்கள் அக்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.