ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் பக்தா்கள் சனிக்கிழமை மிட்டாய் வைத்து வழிபாடு செய்தனா்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தா்கள் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள குழந்தை வேலப்பா் கோயிலில் குழந்தை வடிவமாக வீற்றிருக்கும் முருகனை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இந்தக் கோயிலில் வழிபாடு செய்யும் பக்தா்கள் வேண்டிய வரம் கேட்டு அது நிறைவேறினால், முருகனுக்கு பிடித்த ஆரஞ்சு மிட்டாய்,பிஸ்கெட், சாக்லெட் வைத்து வழிபாடு செய்து நோ்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்வா்.
இந்த நிலையில், சனிக்கிழமை தைப்பூசத்தையொட்டி, குழந்தை வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு மிட்டாய் வைத்து முருகனை தரிசனம் செய்தனா்.