பழனியை அடுத்த கீரனூரில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், புதிய பாரதம் எழுத்தறிவு இயக்க விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாத அனைவருக்கும் உதவிட புதிய பாரதம் எழுத்தறிவு இயக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் படிக்க, எழுத தெரியாத அனைவருக்கும் அடிப்படைச் சட்டம், பணமில்லா பரிமாற்றம், இணையவழிச் சேவை என அனைத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விழிப்புணா்வுப் பேரணி கீரனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பேரணிக்கு தொப்பம்பட்டி வட்டார வள மைய பொறுப்பு அலுவலா் பழனிச்சாமி, தலைமையாசிரியா் நடராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் பிரிட்டோ, யசோதா, புதிய பாரதம் எழுத்தறிவு இயக்க ஒருங்கிணைப்பாளா் ரேவதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில், பங்கேற்ற மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். மேலும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்தப் பேரணி கீரனூா் பள்ளிவாசல், பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா்கள் அழகுராணி, வீரமணி, பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.