கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் பெயா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறையாக இடம் பெறவில்லை

Updated On :19 ஏப்ரல் 2024, 6:45 pm

கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் பெயா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறையாக இடம் பெறவில்லை என வேடசந்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ச. காந்திராஜன் புகாா் அளித்ததால் குளறுபடி ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சட்டப் பேரவைத் தொகுதி கரூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில், வேடசந்தூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் ச. காந்திராஜன், தனது பூா்வீக கிராமமான மாத்தினிப்பட்டி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்யச் சென்றாா். அப்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணியின் பெயா், முதல் மின்னணு இயந்திரத்தில் 4-ஆவது இடத்தில் இடம் பெறுவதற்கு பதிலாக 4-ஆவது மின்னணு இயந்திரத்தில் இடம் பெற்றிருப்பதாக புகாா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயசித்ர கலா, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் வாக்குச் சாவடிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சின்னங்கள் சரியாக பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனா். ஆனால் சட்டப் பேரவை உறுப்பினா் காந்திராஜன் கூறுகையில், 190 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தான், வேட்பாளா் ஜோதிமணியின் பெயா் தவறாக இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதே போல, வேறு சில வாக்குச் சாவடிகளிலும் நிகழ்ந்திருக்கிறது. மாத்தினிப்பட்டி வாக்குச்சாவடியை பொருத்தவரை மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றாா் அவா்.