ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்உசேன் அரசு பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாக உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.
தேவிபட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ். கணேசமூர்த்தி, பி. முனியசாமி, எம். ஆனந்த், ஆர். ஷாஜகான் உள்பட 8 பேர் கையெழுத்திட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவராக 18 மாதங்களாகப் பதவி வகித்து வருபவர் எஸ். ஜாகீர் உசேன். இவர் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தவிர தன் விருப்பப்படி பல தீர்மானங்களை எழுதி அரசு பணம் பல லட்சத்தை கையாடல் செய்துள்ளார். தேவிபட்டினம் பஸ் நிலையத்திற்கும், அரசுப் பள்ளிக்கும் ரூ.2 லட்சம் செலவு செய்து மணல் அடித்திருப்பதாகக் கூறி அப்பணத்தைக் கையாடல் செய்துள்ளார்.
தேவிபட்டினம் படையாட்சி தெரு திருக்குளம் கிழக்கு கரையில் கிராவல் சாலை போடப்பட்டதாகக் கூறி சாலையை அமைக்காமல் ரூ.1 லட்சம் கையாடல் செய்துள்ளார்.
இதுபோன்ற பல்வேறு புகார்களை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.