ராமேசுவரத்திலிருந்து அப்துல்கலாம் பெயரில் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ராமேசுவரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் எஸ்.சேசுராஜ் தலைமை வகித்தார். இதில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரத்திலிருந்து அவரது பெயரில் விரைவு ரயில் ஒன்றை ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும். ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் கட்டணச் சலுகையை ரத்து செய்து விடக்கூடாது. இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு என தனியாக குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செய்யது அம்மாள் அறக்கட்டளைத் தலைவர் பாபு அப்துல்லா, வழக்குரைஞர் கே.குணசேகரன், ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பின் இயக்குநர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.