நதிகள் இணைப்பை வலியுறுத்தி ராமேசுவரத்தில் சனிக்கிழமை அக்னி தீர்த்தக் கடலில் விவசாயிகள் சங்கத்தினர் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய-தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கரும்பு, நெல் போன்ற விவாசாயப் பொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்யவேண்டும். தேசிய மற்றும் தென்னிந்திய நதிகளை இணைத்து விவாசாயிகளுக்கு போதுமான நீர் வழங்கவேண்டும். மத்திய, மாநில அரசு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள நகைக்கடன் உள்பட விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
கடற்கரையில் நின்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் திடீரென கழுத்தளவுக்கு கடலில் சென்று ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து கடலோரப் பாதுகாப்பு போலீஸார் கடலில் இறங்கி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கரைக்கு அழைத்து வந்தனர். அங்கு ராமேசுவரம் காவல்நிலைய ஆய்வாளர் அமுதச்செல்வி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசுகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அதன்பேரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.