கமுதி ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டுக்கான பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியி கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனியார் பள்ளியில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக தொடங்கியது.
இப்போட்டியில், கமுதி, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட தாலுகாக்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியின் இறுதி முடிவுகள் வியாழக்கிழமை பள்ளி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
அதில், 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில், மலட்டாறு வி.வி.எஸ்.எம். பள்ளி டேனியல் மற்றும் பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிக். பள்ளி சரண், மாணவிகள் பிரிவில் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக். பள்ளி கயல்விழி ஆகியோரும், 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சோலைபாண்டி, கமுதி ரஹ்மானியா பள்ளி நவீன் மற்றும் மாணவிகள் பிரிவில் மலட்டாறு வி.வி.எஸ்.எம். பள்ளி பல்லவி ஆகியோரும், 19 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல்நிலைப் பள்ளி அஜித், மாணவிகள் பிரிவில் கமுதி கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சக்திராஜிஆகியோரும் முதலிடம் பிடித்தனர்.
இப்போட்டியில், பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடத்தை முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியும், மூன்றாம் இடத்தை கமுதி கே.என். மேல்நிலைப் பள்ளியும் பெற்றன. பெண்கள் பிரிவில், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது.