எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: திருவாடானையில் மாட்டு வண்டி பந்தயம்
திருவாடானையில் அதிமுக அம்மா அணி சார்பில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம், மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்வர்ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுகோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி ஜோடிகள் கலந்துகொண்டன. இதில், சின்ன ஜோடி, பெரிய ஜோடி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, திருவாடானை-மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பந்தயம் நடத்தப்பட்டது.
இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதையடுத்து, முன்னாள் மாவட்டச் செயலர் ஆணிமுத்து தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் வது. நடராஜன், ஒன்றியச் செயலர் மதிவாணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகரெத்தினம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.