10 நாள் தமிழ் இலக்கிய கருத்தரங்கம் நிறைவு
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் 10 நாள்கள் நடைபெற்ற தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன், சங்க இலக்கியத்தில் அழகியல் என்ற தலைப்பில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
புதன்கிழமை கல்லூரி முதல்வர் ஆ.குருசாமி தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது. புள்ளியியல் துறைத் தலைவர் பூ.முத்துக்குமார்,தமிழ்த்துறைத் தலைவர் ஆ.நாகராசன்,தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர்கள் மெ.செந்தாமரை, ர.அதிசயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மு.முகம்மது இப்ராகிம் நிறைவு விழாப் பேருரையாற்றி, கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் அ.துரைப் பாண்டியன் நன்றி கூறினார்.