பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் செல்வமணி என்ற பெண் புதன்கிழமை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி அந்தோணி அம்மாள் (55) மற்றும் அவரது உறவினர்கள் அபிராமம் பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மனைவி அண்ணாள் தேவி (51), நிஷாமுதீன் மனைவி ராவுத் பாத்திமா (40), சைமன் மனைவி முத்துமணி (58), மேலக்கொடுமலூரைச் சேர்ந்த பாண்டி மகன் முனியசாமி (38) ஆகியோர் வந்திருந்தனர்.
அக்கிராமத்தில் உள்ள பெதஸ்தா ஆலயத்தில் செல்வமணி என்பவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததில், அங்குள்ள புளியமரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி மீது மின்னல் பாய்ந்து, அருகில் நின்றிருந்த அந்தோணி அம்மாள் மீது தாக்கியது. இதில், அந்தோணி அம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும், அண்ணாள்தேவி, ராவுத் பாத்திமா, முத்துமணி, முனியசாமி ஆகியோரும் பலத்த காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.