ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் சனிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இளைஞர் இறந்து கிடந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக, உறவினர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அஜித்குமார் (19) சுற்றுலா வேன் ஓட்டுநராக இருந்தார். இந்நிலையில், அஜித்குமார் அச்சுந்தன்வயல் கிராமப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை மற்றும் இடது காலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து ராமேசுவரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அஜித்குமாரின் தந்தை பெரியசாமியும் மற்றும் உறவினர்களும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் அளித்தனர்.
அதில், யாரிடமும் எந்த தகராறுக்கும் செல்லாத இளைஞர் அஜித்குமார். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, செல்லிடப்பேசியில் வந்த அழைப்பை அடுத்து, வெளியே சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. காலையில்தான் அஜித்குமார் இறந்து கிடந்த விவரம் தெரிய வந்தது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என, அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.