விஜயதசமியை முன்னிட்டு, தேவகோட்டை நகர சிவன் கோயிலில் சனிக்கிழமை அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவகோட்டையில் உள்ள அனைத்து கோயில்களிலும் செப்டம்பர் 21 ஆம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு போடுதல் நிகழ்ச்சி, நகர சிவன் கோயில் குளக்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை அம்மச்சி ஊருணியில் உள்ள கிருஷ்ணன் கோயில், செல்லப்பச்செட்டியார் ஊருணியில் அமைந்துள்ள கைலாசநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில், தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோயில், கோதண்ட ராம சுவாமி கோயில், நகர சிவன் கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், இரகுசேரி மும்முடிநாதர் கோயில் ஆகிய பகுதிகளில் இருந்து சுவாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர சிவன் கோயிலுக்கு வந்தனர். நகர் சிவன் கோயில் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே, மேளதாளங்கள் முழங்க அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், தேவகோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.