சாயல்குடி அருகே எஸ்.மாரியூரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரின் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை தீ வைத்தனர்.
சாயல்குடி அருகே எஸ். மாரியூர் கிராமத்தில் இரு பிரிவினரிடையே முன் விரோதம் இருந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் எஸ்.மாரியூர் கிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்புளியின் இருசக்கர வாகனத்தை ஒரு பிரிவைச் சேர்ந்த மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. இதற்கு பதிலடியாக ஒப்பிலான் சாலை கடைத்தெருவில் சக்திகுமார் என்பவருடைய இருசக்கர வாகனம் மீது மற்றொரு பிரிவினர் தீ வைத்தனர். இதில், பைக் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இதுபற்றி தகவலறிந்த கீழக்கரை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கிம் செரி
தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், சாயல்குடி எஸ்.மாரியூர் பகுதியில் பதற்றம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.