தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை 6 ஆவது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், தேவகோட்டை கல்வி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பொதுக்கூட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், பள்ளிக்கு ஆசிரியர்கள் உரிய நேரத்தில் வரவேண்டும். உரிய நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை கனிவான முறையில் நல்வழிப்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு ஒரு வகுப்புக்குச் சென்று வரவேண்டும். தலைமை ஆசிரியர்களின் கண்காணிப்பில் தேர்வுகள் நடத்தப்படவேண்டும். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.