ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.57 கோடிக்கு தீர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசி மக்கள் நீதிமன்றத்தில் 1,369 வழக்குகளில் ரூ.6.57 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச தீர்வு மையத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முதல் அமர்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி தலைமை வகித்தார்.
இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாரூக் அலி, அவரது மனைவியான ஆர்.எஸ்.மங்கலம் ஷமீலாபர்கானா விவகாரத்து வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இருவரும் சமரசமாகி சேர்ந்து வாழ மக்கள் நீதிமன்றத்தில் சம்மதித்தனர். அவர்களை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.கயல்விழி வாழ்த்தி பாராட்டினார்.
மக்கள் நீதிமன்றத்தில் மெர்க்கண்டைல் வங்கி ராமநாதபுரம் கிளை சார்பில் 12 வழக்குகளுக்கு சமரசம் காணப்பட்டது. அதன்படி ரூ.12 லட்சத்துக்கு கல்விக் கடனைத் தள்ளுபடி செய்தும், ரூ.4 லட்சத்துக்கும் தொழில் கடனை தள்ளுபடி செய்தும் தீர்வு காணப்பட்டது.
மாவட்ட சார்பு நீதிபதி எம்.பிரீத்தா, வழக்குரைஞர் ஜே.உதுமான், கூடுதல் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) டி.வி.அனில்குமார், மாவட்ட உரிமையியல் நடுவர் கே.எஸ்.ராஜேஸ்குமார், வழக்குரைஞர் ஆர்.அஜய்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரமக்குடியில்: பரமக்குடியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி ஜெ.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.ஜெயசந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மொத்தம் 2,086 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவற்றில் 543 வழக்குகளில் ரூ. 1.16 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
திருவாடானையில்: திருவாடானையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் 153 வழக்குகளில் ரூ.19.82 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சங்க தலைவர் நாகராஜன் உள்பட வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் மக்கள் நீதிமன்றம் மூலம் சனிக்கிழமை வரையில் திட்டமிட்ட 8,437 வழக்குகளில் 1,369 வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டு, மொத்தம் ரூ.6.57 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.