ராமநாதபுரம் நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான குமரய்யா கோயில் தெரு பகுதியில் இளைஞர்களே ஒன்று திரண்டு வியாழக்கிழமை சாலையை செப்பனிடும் பணியை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் நகரில் ஜோதிநகர், மகாசக்தி நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் குமரய்யாகோயில் பிரதான சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக இருந்து வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பலனுமில்லை.
சாலைகளில் உள்ள பள்ளங்களால் விபத்துக்களும் அதிகரித்து வந்தன. குண்டும், குழியுமாக இருந்து வந்த சாலைகளில் மழைநீர் தேங்கி பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் உள்பட பலரும் பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகி வந்தனர். கொசுத்தொல்லையும் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு பணம் சேர்த்து ஜே.சி.பி.இயந்திரத்தை வரவழைத்து அவர்களே சொந்த செலவில் சாலையை செப்பனிடும் பணியை மேற்கொண்டனர். குமரய்யாகோயில் தெருவில் வசிக்கும் இளைஞர்கள் சிலரும்
கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட கருவிகளுடன் சாலையை செப்பனிடும் பணியை செய்தனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மலைச்சாமி என்பவர் கூறியது:
10 வருடங்களாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லாமல் போனதால் இளைஞர்களே ஒன்று திரண்டு சாலையை சீரமைக்கும் பணியை செய்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவு சாலையை செப்பனிடுவோம். இனிமேல் எதற்கும் அரசை நம்பி பயனில்லை என்று தெரிவித்தார்.