ராமேசுவரம் நகராட்சி டோல்கேட் ஊழியர்களை தாக்கி ரூ.1.50 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாக கடலோர பாதுகாப்பு குழும காவலர் உள்பட 9 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
ராமேசுவரம் முத்துராமலிங்கத் தேவர் நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் 3 பேருந்துகளில் சென்றனர். அப்போது ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாகன வரி வசூல் செய்யும் மையத்துக்கு சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள், அந்த பேருந்துக்கு கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு பேருந்தில் இருந்தவர்கள் வரி வசூல் செய்பவர்களை தாக்கி ரூ.1.50 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று விட்டதாக ஊழியர் சந்தோஷ்குமார் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வரி வசூல் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்பு குழும காவலர் புலித்தேவன், முத்துராமலிங்கத் தேவர் நகர் சமுதாயத் தலைவர் முனியசாமித் தேவர், கோயில் ஊழியர் துரை, முத்துராமலிங்கம், சபரி, ராஜா, பாலா, முருகன், சிறைமீட்டான் ஆகிய 9 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.