மீனவர்களின் மீன்கூடுகளை சேதப்படுத்திய வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும், மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஐ.டி.யூ. பிரிவின் மாவட்டச் செயலர் எம். கருணாமூர்த்தி தலைமையில், கீழக்கரைப் பகுதி மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பாசி சேகரித்தல், மீன்கூடுகளை வைத்து மீன்பிடித்தல், நண்டு வலை, மீன் வலை, சிங்கி வலை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வளத்துக்கோ, மீன் வளத்துக்கோ, பவளப் பாறைகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி கீழக்கரைப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, கூடுகளை வாழைத் தீவுப் பகுதியில் வைத்து விட்டு திரும்பிவிட்டனர். பின்னர், கடந்த 13 ஆம் தேதி மீன்கூடுகளை எடுத்துப் பயன்படுத்திட வாழைத் தீவுக்குச் சென்ற மீனவர்கள், அங்கு வனத் துறையினரால் கூடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை அறிந்தனர். இதனால், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து கீழக்கரை வனச்சரகரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே, வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சேதப்படுத்தப்பட்ட மீனவர்களின் மீன்கூடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.