திருவாடானை அருகே சி கே மங்கலத்தில் நான்கு விலக்கு சாலை சந்திப்பில் பழுதாகியுள்ள உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சி கே மங்கலத்தில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய நான்கு சாலைகளும் சந்திக்கும் ரவுண்டானா பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு பொருத்தபட்டு பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த விளக்கு பழுதாகி இப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வருகிறது.
இது குறித்து இப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த சில நாள்களுக்கு முன் சம்பந்தபட்ட துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த பணியை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டனர். எனவே சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செழுத்தி உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.