திருவாடானை பகுதியில் பருவ மழை தாமதத்தால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. மேலும் கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 42 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் இப்பகுதி விவசாயிகள் ஏற்கெனவே பெய்த மழையை நம்பி, நெல் சாகுபடி செய்து, களைக்கொல்லி மற்றும் உரம் ஆகியவற்றை இட்டு, பயிரை நன்கு வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் பாதியை கடந்து விட்ட நிலையில் இன்னும் பருவமழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. வளர்ந்த பயிரும் கருக தொடங்கியுள்ளது. இன்னும் சில நாள்களுக்குள் மழை பெய்யவில்லை என்றால் நெல் பயிர்கள் முழுமையாக கருகி விடும் நிலை உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயி நாகநாதன் கூறுகையில், இப் பகுதியில் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படும். இருப்பினும் அதிக நெல் உற்பத்தி செய்யப்படுவதால் ஓரளவு குடும்பத் தேவையை பூர்த்தி செய்து வந்தோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்திருந்தோம். இதுவரை அரசு இழப்பீடு வழங்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது விளைச்சல் இருக்கும் என நம்பி உள்ளோம். ஆனால் இதுவரை மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலும் பயிர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.