கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளில் அரசின் நடவடிக்கை முழுமையடையவில்லை. இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், விவசாயிகள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கெடுப்பு என அரசு காலம் தாழ்த்தாமல் முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் என்றார். அப்போது தமாகா மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம்பிரபு, ஹசன் அலி ஆகியோர் உடனிருந்தனர்.