சபரிமலையின் புனிதம் காக்க அவசரச் சட்டம் தேவை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இது குறித்து ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியது:
வரும் நவம்பர் 5 ஆம் தேதி சபரிமலையில் ஒரு நாள் நடை திறப்பு நடைபெறுகிறது. அந்த நாளில் பம்பா நதிக்கரையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் ஒன்று கூடி சபரிமலையின் புனிதம் காக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. சபரிமலை நிர்வாகப் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்படவுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்து மக்களுக்கும், ஐயப்பப் பக்தர்களுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில் இதுவரை 2445 பேரை கைது செய்திருக்கிறார். எனவே பினராயி விஜயன் அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்.
இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் வெற்றி பெற முடியாத வகையில் இந்து மக்கள் கட்சி ஒரு கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளோம். ரஜினியை முதல்வராக ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். திமுக, அதிமுக இல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ரஜினியுடன் பேசவும் முடிவு செய்துள்ளோம்.
மீ.டூ விவகாரத்தில் பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதே போல புகார் சொல்பவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தால் அவர்கள் மீதும் தகுந்த விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் செய்துள்ளோம். இலங்கையில் தமிழர்களை கொல்ல திமுகவும் உடந்தையாக இருந்தது என ராஜபக்சே கூறியதற்கு இதுவரை மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை என்றார்.
பேட்டியின் போது கட்சியின் மாநில தொழில் நுட்பப் பிரிவு பொதுச்செயலாளர் கொக்கி .குமார், ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணதாசன்(மேற்கு)முனீஸ்வரன்(கிழக்கு), மாநில அமைப்பு செயலாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகபூபதி ஆகியோரும் உடன் இருந்தனர்.