கமுதி அருகே அரசு மணல் குவாரி அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சனிக்கிழமை நடைபெற்ற கிராம கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கமுதி அருகே செங்கோட்டைபட்டி மலட்டாறு பகுதியில் வெள்ளிக்கிழமை அரசு மணல் குவாரி அமைக்க, மதுரை மண்டல பொதுப்பணித்துறை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் அதிகாரிகள் இடம் தேர்வு செய்ய அளவீடு செய்யச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஆயுதங்களுடன் விரட்டியதால், அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து செங்கோட்டைப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கூறியது:
செங்கோட்டைபட்டியில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்த இடத்தில் 10 அடி அகலம் மட்டுமே மலட்டாறு உள்ளது.
ஆனால் அதிகாரிகள் அருகில் உள்ள விவசாயிகளின் பட்டா இடங்களையும் சேர்த்து அளவீடு செய்து வருகின்றனர். இங்கு அரசு, தனியார் மணல் குவாரிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றார்.