ராமநாதபுரம் மாவட்டம், கடலாடிவட்டம் சிக்கல் அருகே பி.கீரந்தை கண்மாயில் குடிமராமத்துப் பணி செய்வதாகக் கூறி மணல் திருட்டு நடைபெற்றதை, சார்-ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பி.கீரந்தை, தத்தங்குடி கண்மாயில் குடிமராமத்துப் பணி என்ற பெயரில் மணல் கடத்தப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் உத்தரவின்பேரில், பரமக்குடி சார்-ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்தார். அதில், குடிமராமத்துப் பணி என்ற பெயரில் சட்ட விரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிக்கல் வருவாய் ஆய்வாளர், பி. கீரந்தை கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். கண்மாய் பகுதியில் மணல் அள்ளப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தபோது, கடலாடி வட்டாட்சியர் எம். முத்துலெட்சுமி, மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர். செந்தில்வேல்முருகன், கனிம வளத்துறை துணை வட்டாட்சியர் பூ. வீரராஜா, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கண்ணன், சிக்கல் காவல் ஆய்வாளர் முகம்மது நசீர், வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் இருந்தனர்.