கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இங்குள்ள அரியநாச்சி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு வண்ணாங்குளம் கிராமத்தில் இருந்து கமுதி சாலை வழியாக பெரிய மாட்டு வண்டிப் பந்தம், சின்னமாட்டு வண்டிப் பந்தயம் என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 29 மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியை காண கமுதி, வண்ணாங்குளம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். போட்டி ஏற்பாடுகளை வண்ணாங்குளம் கிராம பொதுமக்கள் செய்தனர்.