ராமநாதபுரம் அருகே பனைக்குளத்தில் உள்ள தவத்திரு சித்ரமுத்து அடிகளாரின் 72 ஆம் ஆண்டு தீப தரிசன விழா, ஏப்ரல் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
பனைக்குளத்தில் சித்ரமுத்து அடிகளாரின் ஆத்ம சாந்தி நிலையம் உள்ளது. இங்கு, 72 ஆம் ஆண்டு தீப தரிசன விழா ஏப்ரல் 19 ஆம் தேதி காலை அருளொளி சத் சங்கத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு, அழகன்குளம் அழகிய நாச்சியம்மன் மகளிர் மன்றத்தினரின் திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி காலையில் தீப தரிசன விழா சி. ஆறுமுகம் தலைமையில் தொடங்குகிறது.
தொடர்ந்து, ராமநாதபுரம் தமிழ் சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம் அருளொளியேஅகிலத்தின் ஒளி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். பின்னர், பக்தர்கள் பார்வையில் அருளொளி என்ற தலைப்பில், அடிகளாரின் பக்தர்கள் பலரும் தங்களது அனுபவங்களை பேசுகின்றனர். மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. விழாவில், மலேசியா, இலங்கை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சித்ரமுத்து அடிகளாரின் பக்தர்கள் ஏராளமானோர் வரவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் செயலர் டாக்டர் பொ. சந்திரசேகரன் மற்றும் ஆத்ம சாந்தி நிலையப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.