கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் உலக பெண் குழந்தைகள் தின சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி தலைமையில், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தங்கப்பாண்டியன், வீரராகவன், வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரெத்தினகுமாரி ஆகியோரது முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இலவசமாக தையல், வாழ்க்கை கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்ட 11 வயது முதல் 18 வயதான 30 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள், சத்துணவு பணியாளர்கள், குழந்தைகள் பங்கேற்றனர். வட்டார மேற்பார்வையாளர் எலிசபெத் ராணி நன்றி கூறினார்.