ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை சனிக்கிழமை முதல் வாபஸ் பெறுவதாகவும், வரும் அக். 15 ஆம் தேதி முதல் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளதாகவும் மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது,
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்கவும், சேதமடைந்துள்ள படகுகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், டீசல் விலையை குறைக்கவும், மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்கவும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த அக். 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கினர். கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன்பிடி வர்த்தகம் பாதிப்படைந்தது.
இந்நிலையில்,தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (அக்.13) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற திங்கள்கிழமை (அக்.15) முதல் அனுமதி பெற்று மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.