ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சித்தி, புத்தி தேவியருடன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாடானை அருகேயுள்ள உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் சீதையை மீட்க ராமபிரான், இலங்கை செல்லும் முன் இக்கோயிலில் வணங்கிச் சென்றதாக புராண வரலாறு கூறுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, செப்டம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து நாள்தோறும் இரவில் பல்லக்கு, கேடகம், குதிரை, யானை, மூஷிகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாண விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே விநாயகருக்கு சித்தி, புத்தியருடன் திருக்கல்யாண நிகழ்ச்சி, இக்கோயிலில் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.