தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் செவ்வாய்கிழமை இரவு நடந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகேயுள்ள தொண்டியைச் சேர்ந்த சேக்முகமது (35), இவரது சகோதரர் செய்யது அபுதாஹிர் (30) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு தொண்டி பழைய பேருந்து நிலையம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சேக் முகம்மது பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தொண்டி போலீஸார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.