ராமநாதபுரம் நகரில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சனிக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலின் ஆடிப்பூர விழா சனிக்கிழமை அதிகாலை தொடங்கியது. அதையடுத்து கணபதி ஹோமமும், 108 கலச அபிஷேகமும் நடந்தன. பின்னர் 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. சங்குகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. மாலையில் ராமநாதபுரம் சந்தைக்கடை பகுதியில் இருந்து அக்னிச்சட்டி, வேல்காவடிகளுடன் புறப்பட்ட ஏராளமான பக்தர்கள் கோயில் வரை சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரத்தில் வெளிப்பட்டினம் திரெளபதியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.