பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நீர்ப்பாசன கடன் திட்டத்திற்காக சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆகவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுகளை இணைத்திருக்க வேண்டும்.
சிறு மற்றும் குறு விவசாயி என்பதற்கான சான்றினை அந்தந்தப் பகுதி வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும்.
நில உடைமைக்கு ஆதாரமாக கணினி வழிப் பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.