மீனவர்கள் பிடித்து வரும் காரல், சூடை மீன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி போடுவதை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் மற்றும் உலர் ஐஸ் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பொருளாளர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜேசுராஜ், மாவட்ட செயலர் எமரிட் மற்றும் உலர் ஜஸ் மீன் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கராஜ், செயலர் சந்தியாகு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காரல், சூடை மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நீக்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.